பார்லே நிறுவனம் தனது புகழ்பெற்ற மெலோடி டாப்பியில் புதிய சுவை கொண்ட ‘மெலோடி டிராமிசு’ என்ற லிமிடெட் எடிஷன் சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா-இத்தாலி நட்புறவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த தயாரிப்பு, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய ‘மெலோடி’ தருணங்களுக்கு நேரடி பதிலளிப்பாக அமைந்துள்ளது.
கடந்த மே மாதம் ரோம் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி டாப்பிகளை பரிசாக வழங்கினார். இந்தப் பரிசைப் பெற்ற மெலோனி, “பிரதமர் மோடி மிகவும் சுவையான மெலோடி டாப்பியை பரிசாகத் தந்துள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். இரு தலைவர்களும் சிரித்துப் பேசிய அந்தக் காட்சி உலகம் முழுவதும் பரவி டிரெண்டாக மாறியது.
ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு முதல் மோடி மற்றும் மெலோனியின் பெயர்களை இணைத்து ‘மெலோடி’ என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தது. ஜி20 மற்றும் COP28 மாநாடுகளில் இருவரும் எடுத்த புகைப்படங்கள் இந்த மீம்மை மேலும் உயிர்ப்பித்தன. இப்போது அந்த நட்பு உண்மையாகவே ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது. புதிய மெலோடி டிராமிசு, இத்தாலியின் புகழ்பெற்ற காபி கலந்த டிராமிசு இனிப்பின் சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
180 கிராம் எடையுள்ள பாக்கெட்டின் முகப்பில் “இந்தியா-இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த தயாரிப்பு, விரைவுப் பொருள் விநியோக தளமான பிளிங்க்இட்டில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. காபி கேண்டி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள இது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய லிமிடெட் எடிஷன் ஆகும்.
1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மெலோடி, பல தசாப்தங்களாக இந்தியக் குழந்தைகளின் விருப்பமான இனிப்பாக இருந்து வருகிறது. இப்போது அது சாதாரண மிட்டாயில் இருந்து சர்வதேச ராஜதந்திர உறவின் இனிமையான அடையாளமாக உயர்ந்துள்ளது. இந்தியா-இத்தாலி நட்பை இன்னும் இனிமையாக்கும் இந்த முயற்சி, வணிக உலகத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
