தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேர் குடும்பத்தினருக்கு இன்று அரசு வேலை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி மக்களின் நினைவுகளை சுட்டிக்காட்டி தனது பதிலடியை அளித்துள்ளார்.
இன்று பிற்பகல் 12 மணியளவில் கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவத்தை நேரடியாக குறிப்பிட்டு திமுக மற்றும் காவல்துறையை கடுமையாக விமர்சித்தார். “கூட்டம் அதிகமாக இருப்பதை கரூர் போலீஸ் எங்களுக்கு அலர்ட் செய்திருக்கலாம். அல்லது மீட்டிங்கை ரத்து செய்யலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், ஹைவேயில் இருந்து போலீஸே எங்களை உள்ளே அழைத்து வந்து ‘நாடகம்’ ஆடியுள்ளது. நான் அவர்களை முழுமையாக நம்பினேன். பேச்சின்போது நன்றி கூட தெரிவித்தேன். இப்படி ஒரு சூழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்று வலியுறுத்தினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த திமுக எம்பி கனிமொழி, செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒவ்வொருவருக்கும் தங்கள் பொறுப்பு இருக்கிறது. அதை புரிந்துகொள்ள வேண்டும். விசாரணை நடைபெறும் விவகாரம் என்பதால் விரிவாக பேச விரும்பவில்லை. பொறுப்புடன் இருப்பதே சரி. ஆனால் அந்த நேரத்தில் மக்களோடு துணையாக நின்றவர்கள் யார், அவர்களுக்கு உதவியவர்கள் யார், துன்பத்தில் தவிக்கவிட்டுவிட்டு அங்கிருந்து சென்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காவல்துறையும், அதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியுள்ள நிலையில், கனிமொழியின் இந்த பதிலடி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் மறைமுகமாக வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. கரூர் நிகழ்வு தமிழக அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
