தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ கீழ் உணவு தயாரித்து வழங்குபவர்களைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கோரியுள்ளது.
3 மாநகராட்சிகள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் மூன்று ஆண்டுகளுக்குக் காலை உணவு வழங்கப்படவுள்ளது.
இதற்குத் தகுதி வாய்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், நகர அல்லது பகுதி வாரியான குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய சேவை குழுக்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு பணியின் மதிப்பு ரூ. 37 லட்சம் மற்றும் அதிகபட்சப் பணியின் மதிப்பு ரூ. 9.20 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை http://www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 27ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முன் கலந்தாய்வுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11.00 மணியளவில் அந்தந்த மாநகராட்சி அல்லது நகராட்சி வளாகத்தில் நடைபெறும்.
ஒப்பந்தப்புள்ளிகளைப் பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கக் கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதிமாலை 3 மணி வரை ஆகும். அதன்பிறகு அதே நாள் மாலை 03.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

