சட்ட விதிமீறல்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டாமல், அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் சாதாரணமாகக் கேள்வி எழுப்பும் ஒரு மேடையாகப் பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த ஏ.விஸ்வநாதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில், புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 400 மீட்டர் தூரத்திலேயே ஏற்கனவே ஒரு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
எனவே, புதிய பேருந்து நிலையம் கட்டுவது அரசுக்குப் பணத்தை வீணடிக்கும் தேவையற்ற செலவாகும். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவிலுக்கு அருகில் பேருந்து நிலையம் அமைப்பது பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானது. இது தொடர்பாக பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் அனுப்பிய புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அடிப்படை சட்ட விதிமீறல்கள் என்ன என்பதைச் சட்டப்பூர்வமாக நிரூபிக்காமல், வெறும் புகைப்படங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துத் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்குகளை ஏற்றுக்கொண்டு, மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளை நீதிமன்றம் முடக்காது.
அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்
ஒரு ஊரின் நகர்ப்புற வளர்ச்சி, எதிர்காலப் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை மதிப்பிட வேண்டியது அதிகாரிகளின் வேலை. ஒரு பேருந்து நிலையம் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய அதிகாரிகளை விடச் சிறந்த நீதிபதிகள் யாரும் இருக்க முடியாது.
அரசின் திட்டங்களில் வெளிப்படையான சட்டவிரோத செயல்களோ அல்லது விதிமீறல்களோ நிரூபிக்கப்படாத பட்சத்தில், நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறி நீதிபதிகள், இந்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
