வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைப் பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் 2023-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. சத்திய ஞானசபையின் புனிதத் தன்மையும் பெருவெளியின் அமைப்பும் பாதிக்கப்படும் எனக் கூறி, அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரூ. 100 கோடி மதிப்பிலான வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுவிட்டதாக அறநிலையத் துறை தெரிவித்தது. சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிட்டாலும், சத்திய ஞானசபைப் பெருவெளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும், அங்கு நூலகம் மற்றும் யோகசாலை மட்டுமே அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
