தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வீசுவதற்கு தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சடங்குகள் என்ற பெயரில் ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சிவனுபாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தை பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்து, தொல்லியல் துறையுடன் இணைந்து அதன் பாரம்பரிய வடிவத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் சடங்கு பொருட்களை வீசுவதால் ஆற்றின் இயல்பு பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இனிமேல் ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் அஸ்தியை சுடப்படாத மண் பானைகளில் மட்டுமே கரைக்கலாம்; மற்ற பானைகள் அல்லது பொருட்களை ஆற்றில் வீசக் கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
