உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். துனகிரி (INS Dunagiri), ஐ.என்.எஸ். சன்ஷோதக் (INS Sanshodhak) மற்றும் ஐ.என்.எஸ். அக்ராய் (INS Agray) ஆகியஇந்திய கடற்படையின் மூன்று முக்கிய போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்..
இந்த மூன்று முன்னணி போர்க்கப்பல்களின் இணைப்பு, இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் Warship Design Bureau மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த Garden Reach Shipbuilders & Engineers (GRSE) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, GRSE நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல்கள், கடல்சார் போர், நீரியல் ஆய்வு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய திறன்களை கொண்டுள்ளன.
ஐ.என்.எஸ். துனகிரி
ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐந்தாவது ஸ்டெல்த் போர்க்கப்பலான துனகிரி, பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் மிதமான தூர வான்வழி பாதுகாப்பு ஏவுகணை (MR-SAM) உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது கடற்படையின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறனை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.
ஐ.என்.எஸ். சன்ஷோதக்
பெரிய அளவிலான நான்காவது ஆய்வுக் கப்பலான சன்ஷோதக், கடலோர மற்றும் ஆழ்கடல் நீரியல் ஆய்வுகள், கடலியல் மற்றும் புவியியல் தரவு சேகரிப்பு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் Autonomous Underwater Vehicles (AUVs) மற்றும் Remotely Operated Vehicles (ROVs) உள்ளிட்ட மேம்பட்ட ஆய்வு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐ.என்.எஸ். அக்ராய்
அர்னாலா வகை நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு (ASW) ஷாலோ வாட்டர் க்ராஃப்ட் வரிசையில் நான்காவது கப்பலான அக்ராய், இலகுரக டார்பிடோக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் செயல்படும் சோனார் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களிலும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் கட்டுமானப் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) பங்கேற்றுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
இந்த கப்பல்களின் சேவையினை தொடங்கி வைத்திருப்பது, ஆத்மநிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய அரசு, இந்திய கடற்படை, பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் MSME-களின் ஒருங்கிணைந்த முயற்சியை எடுத்துக்காட்டுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
