விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும் என்றும், உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கும் களிமண் விநாயகர் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘மன் கி பாத்‘ நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை தயாரிப்பாளர்களும் களிமண் சிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“உங்கள் வீடு, குடியிருப்பு அல்லது பகுதியிலுள்ள விநாயகர் சிலை, நம் நாட்டின் மண்ணால், நம் குயவர்கள் மற்றும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
விநாயகர் சதுர்த்தி குறித்து பேசுமாறு பலர் தனக்கு கடிதம் எழுதியிருந்ததாக குறிப்பிட்ட அவர், சிலைகளை வாங்கும்போது அவை எந்தப் பொருளால் தயாரிக்கப்பட்டவை, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை மக்கள் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
“பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளை வாங்கவே வேண்டாம். களிமண் சிலைகள் நீரில் இயற்கையாகவே கரைந்துவிடும். இதன் மூலம் நதிகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். அதே நேரத்தில், உள்ளூர் கைவினைக் கலைஞர்களிடம் இருந்து சிலைகளை வாங்குவது ‘வோகல் ஃபார் லோக்கல்‘ என்ற உறுதியையும் வலுப்படுத்தும்,” என்றார்.
மேலும், மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தின் பியோரா பகுதியைச் சேர்ந்த பெண்கள், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அவற்றை சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘ஈகோ பிரிக்ஸ்‘ ஆக மாற்றிய முயற்சியையும் பிரதமர் பாராட்டினார்.
“மாற்றத்தை வேறு யாராவது கொண்டு வருவார்கள் என்று காத்திருக்காமல், அந்த பெண்கள் தாங்களே முன்வந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி பாட்டில்களை சேகரித்தனர். இன்று அவை பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை அழகுபடுத்தும் ஈகோ பிரிக்ஸ்களாக மாறியுள்ளன. கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இதேபோல், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், ‘கேட்ச் த ரெயின்‘ இயக்கத்தின் வேகம் குறையக் கூடாது என்றும், “மழைநீரின் ஒவ்வொரு துளியையும் சேமிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் மக்களிடம் அழைப்பு விடுத்தார்.
