தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி உணவின் அடிப்படைப் பொருளான அரிசிக்கு ஏற்படும் இந்த விலை உயர்வு, சமையல் செலவை உயர்த்தி பொதுமக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது.
இதனுடன் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்திருப்பதால் சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ரக அரிசிகளின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்தச் சந்தையில் உள்ள வியாபாரிகளின் தகவலின்படி, தமிழகத்திற்கு தஞ்சாவூர் பகுதியுடன் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் அதிக அளவில் அரிசி வருகிறது.
குறிப்பாக கர்நாடகாவில் விளையும் பொன்னி சன்னரக அரிசிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் அங்கு விளைச்சல் குறைந்ததால், கர்நாடக வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தமிழக சந்தையில் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.தற்போது 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. 10 கிலோ பாக்கெட் ரூ.650-ல் இருந்து ரூ.800 ஆகவும், 5 கிலோ ரூ.350-ல் இருந்து ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவிலிருந்து வரும் ஸ்டீம் வகை ராய்ச்சூர் பொன்னி அரிசி 26 கிலோ ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்து சுமார் 30 சதவீத விலை உயர்வைக் காட்டுகிறது. பாசுமதி அரிசியும் விலை உயர்வில் உள்ளது. 30 கிலோ பாசுமதி முன்பு ரூ.2,200-2,300 ஆக இருந்தது இப்போது ரூ.2,800-3,000 வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ பாசுமதி ரூ.70-ல் இருந்து ரூ.85-90 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்ந்தால் குறைந்த வருமானக் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இருப்பினும், புதிய நெல் வரத்து அதிகரிக்கும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதுவரை நெல் வரத்து மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சலே விலையைத் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
