திருப்பூரில் சுமார் ஆயிரக்கணக்கான அரசு ஆவணங்கள் மற்றும் கடிதங்களை டெலிவரி செய்யாத தபால்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை கிளை தபால் நிலையத்தில் தபால்காரராக பணியாற்றியவர் செந்தில்குமார். இந்தப் பகுதி மக்களுக்கு வர வேண்டிய முக்கியமான அரசு கடிதங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் போன்றவை நீண்ட நாட்களாக உரிய நபர்களுக்கு சென்றடையவில்லை என பல புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து திருப்பூர் கோட்ட தபால் துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை அனுப்பினர். அதன்பேரில், தபால் துறை அதிகாரிகள் தபால்காரர் செந்தில்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவரை 7 பெரிய பெரிய சாக்கு மூட்டைகளில் கட்டி பதுகி வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
அரசு ஆவணங்களைப் பொறுப்பற்ற முறையில் பதுக்கி வைத்தது மற்றும் பொதுமக்களுக்குச் சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்திற்காக, தபால்காரர் செந்தில்குமாரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடிதங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
