தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சார விநியோகத்தில் தொடர் தடங்கல், மின் கட்டண குளறுபடி ஏற்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் Reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
