இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கான தனது முக்கிய அரசுமுறை பயணத்தின்போது ருமேனியாவின் புகழ்பெற்ற புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகத்திடம் இருந்து கவுரவ முனைவர் (டாக்டர்) பட்டத்தைப் பெற்று கவுரவிக்கப்பட்டார். இந்த அங்கீகாரம் இந்தியா-ருமேனியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி முர்மு, ருமேனிய அதிபர் நிகோசர் டென்னுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். இதில் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தக விரிவாக்கம், தொழில்நுட்பப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
இதையடுத்து, புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விழாவில் ஜனாதிபதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர், மூத்த பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உயர் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
பட்டம் பெற்றுக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, “இந்த அங்கீகாரத்தை நான் தனிப்பட்ட முறையில் அல்லாமல், 140 கோடி இந்தியர்களின் சார்பில் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார். இந்தியா-ருமேனியா இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவின் அடையாளமாக இந்த விருது அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையையும், ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் மாற்றக்கூடிய மிகப்பெரிய சக்தி” என்றார்.
உலக நாடுகளுக்கு இடையே அறிவுப் பரிமாற்றம் மற்றும் கல்வித் துறை ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இளைஞர்களின் திறன்களை வளர்க்கும் கல்வி முறையே நிலையான வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதை சுட்டிக்காட்டினார்.ருமேனிய பயணத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, இந்தியா-ருமேனியா தொழிலதிபர்கள் சந்திப்பில் ஜனாதிபதி பங்கேற்றார். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த அவர், உற்பத்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் பரஸ்பர வளர்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி முர்முவின் இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கல்வி, பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் புதிய உயரங்களை எட்டும் வகையில் இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
