நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் முன்வைத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் கல்வி முறை கடந்த 10 ஆண்டுகளில் முற்றிலும் சீரழிந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தேர்வுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. தேர்வு முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
“அதிகாரச் செருக்கைக் கைவிட்டு, வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களின் நியாயமான குரலுக்குப் பிரதமர் மோடி செவிசாய்க்க வேண்டும். எனது கைதும், என்னிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதமும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்த நாட்டின் இளைஞர்களுக்கும் கல்வி முறைக்கும் இழைக்கப்பட்ட அநீதியே முதன்மையானது” என்று ராகுல் காந்தி ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு முறையில் ஆண்டுதோறும் சுமார் ரூ.1.32 லட்சம் கோடி அளவுக்கு பணப்புழக்கம் நடைபெறுவதாகவும், வினாத்தாள் கசிவால் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகி, கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தாக்கிய சம்பவத்துக்கும் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
* மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
* மாணவர்களை தாக்கிய அனைத்து அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
* இந்த விவகாரத்துக்கு இறுதிப் பொறுப்பேற்க வேண்டியவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர்கள் முன்வைத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த மூன்று கோரிக்கைகளும் 100 சதவீதம் நியாயமானவை. தெருக்களில் போராடும் ஒவ்வொரு மாணவருடனும் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
