யோத்தி ராமர் கோவிலின் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியல் நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதாக ஜூன் 25-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அறக்கட்டளையின் முன்னாள் ஓட்டுநர் ராமஷங்கர் மிஸ்ரா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார். சம்பவத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணையின்போது, மனுதாரர்கள் இந்த வழக்கை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆரம்பக்கட்ட விசாரணையை SIT மேற்கொண்டதாகவும், தற்போது காவல்துறை வழக்கை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, SIT-ஐ மூத்த அதிகாரி தலைமையில் மறுசீரமைக்க முடியுமா என்று நீதிபதிகள் அரசிடம் கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில், “இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தினார். நிலை அறிக்கையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version