கொச்சி கேரளாவில் லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் பாதிப்பால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மழைக்கால சூழலில் கேரளா முழுவதும் பரவும் தொற்று நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்) பாதிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை இரண்டு பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்தபடி, லெப்டோஸ்பைரோசிஸ் என்பது லெப்டோஸ்பைரா என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளை ஒருங்கே பாதிக்கும் ஜூனோடிக் நோயாகும். தொற்று ஏற்பட்ட எலி, நாய், மாடு போன்ற விலங்குகளின் சிறுநீர் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்போதோ அல்லது அந்த சிறுநீர் மூலம் மாசுபட்ட தண்ணீர், மண், உணவு ஆகியவற்றின் வழியாகவோ மனிதர்களுக்கு பரவுகிறது.
மழை, வெள்ளம் போன்ற காலங்களில் இந்த அபாயம் அதிகரிக்கிறது. அறிகுறிகளாக உயர் காய்ச்சல், தலைவலி, தசைவலி, கண்கள் சிவத்தல், மஞ்சள் காமாலை, சிறுநீர் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எலிக்காய்ச்சலுடன் சேர்த்து பிற தொற்றுகளும் பரவி வருகின்றன. புதிதாக 12 பேருக்கு டெங்கு, 8 பேருக்கு மலேரியா, 6 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,776 பேர் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இத்தகைய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கேரள சுகாதாரத் துறை உயர் எச்சரிக்கை நிலையில் செயல்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கும் இடங்களை அகற்றுதல், எலி ஒழிப்பு பணிகள், தண்ணீர் மற்றும் உணவு சுகாதாரத்தைப் பேணுதல், தேவையான இடங்களில் ஆண்டிபயாடிக் சிகிச்சை ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளது. மக்கள் ஈரமான பகுதிகளில் செல்லும்போது காலணி அணிதல், காயங்களைப் பாதுகாத்தல், சந்தேகமான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ உதவி பெறுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை லெப்டோஸ்பைரோசிஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
