தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் மோதல் வெடித்தது. கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.
இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்து எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சமாதானமானதாக கூறப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.
இதனிடையே விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும், இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சி.வி.சண்முகம். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி. சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும்.
எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
