தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வபோது வானம் இருட்டினாலும், மிதமான மழை பெய்தாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. உச்சகட்டமாக நேற்று வெயில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் கொளுத்தியது.
தலைநகர் சென்னையில் 107 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் நிழலை தேடி ஒதுங்கினர். மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்ததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் நேற்று அதிகபட்ச வெயில் பதிவானது. பகலில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தால், இரவிலும் உஷ்ணம் அதிகரித்தது. பொதுமக்கள் புழுகத்திலும், வியர்வையிலும் அசாதாரணமான சூழலை அனுபவித்தனர்.
ஆகையால் இந்த காலகட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை சிறுவர்கள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில் மேலும் 5 நாட்கள் இந்த வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு திசையில் இருந்து அனல் காற்று வீசுகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசும். வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. வரும் 5 நாட்களிலும் வெயில் அதிகபட்சமாக 42இகிரி செல்சியஸ் வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
