இந்தியா- சுலோவாகியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
ஐரோப்பிய நாடுகளில் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதலாவதாக பிரான்ஸ் சென்றார். அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். புத்தாக்கம், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளை சேர்ந்த முன்னணி கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் மூலதன நிதியங்களையும் ஒன்றிணைக்கும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ (Bharat Innovates) என்ற நிகழ்வை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்தநிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று (ஜூன் 15) சுலாவாகியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் பிராடிஸ்லாவாவில் பிரதமர் மோடிக்கு வந்தே மாதம் பாடல் பாடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அரசு மாளிகையில் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோசை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இருநாடுகள் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை சார்ந்த இருநாட்டு ஒத்துழைப்பு இருதரப்பு நம்பிக்கை மற்றும் முலோபாய ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இருநாடுகள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி அளிப்பதாகவும், கூட்டு ஒத்துழைப்பு, உற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பின்னர் பேசிய சுலோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவும், சுலோவாகியாவும் ஒருங்கிணைந்து கூட்டு ஒத்துழைப்பில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

