பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி (Capgemini) நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் (Crèche) சிறு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பத்திலேயே புகார் அளித்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் சட்ட மற்றும் பரோல் அலுவலர் திலகேஷ் குமார் கூறுகையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி குழந்தைகள் உதவி எண் (Child Helpline) மூலம் புகார் கிடைத்ததாக தெரிவித்தார். ஏற்கனவே இந்த கிரெச்சில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்த அதே நபரே மீண்டும் தொடர்புகொண்டு, சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களையும் ஆதாரமாக வழங்கியதாக அவர் கூறினார்.
அந்த வீடியோக்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மற்றும் HAL காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கிரெச்சில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வீடியோவில் காணப்பட்ட பின்னணி, இட அமைப்பு மற்றும் ஊழியர்களின் முகங்கள் அனைத்தும் அங்குள்ளவையே என்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புகாரின்படி, அழுத குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்ததுடன், தண்ணீர் நிரப்பப்பட்ட குறுகிய குழாய்களுக்குள் திணித்தும், குளியலறை போன்ற குறுகிய இடங்களில் அடைத்தும், உடல் ரீதியாக மிரட்டியும் ஊழியர்கள் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரெச்சின் பொறுப்பாளர் உட்பட ஐந்து பெண் ஊழியர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் மிரட்டல் மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் குழந்தைகள் மீதான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் அங்கு வழக்கமான ஒன்றாக இருந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் மன உளைச்சலை ஊழியர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றும், இது நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், அந்த குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் கேப்ஜெமினி நிறுவன ஊழியர்களாக இருந்தாலும், கிரெச்சுக்குள் பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படாததால், இந்த கொடுமைகள் குறித்து அவர்கள் முற்றிலும் அறியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த விவகாரம் குறித்து கேப்ஜெமினி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு வளாகத்தில் இயங்கி வந்த குழந்தைகள் பராமரிப்பு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், அந்த கிரெச் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்ததால், அன்றாட செயல்பாடுகள், ஊழியர்கள் நியமனம் மற்றும் சம்பள விநியோகம் உள்ளிட்டவற்றில் கேப்ஜெமினிக்கு நேரடி பங்கு இல்லை என்றும், உண்மைகளை கண்டறியும் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
