பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தன்னிடம் மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரை ஒரு மணி நேர இடைவெளியில் பயணி ஒருவர் கச்சிதமாகப் பிடித்துள்ளார். அதில் ஒரு மோசடிக்காரர் பயந்து ஓடும் தற்போதைய வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.

https://www.instagram.com/ranvijayy_vlogs/reel/DZ2UxFgq5db/

@ranvijayy_vlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தொடக்கத்தில், பயணி ஒருவர் மோசடிக்காரனை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்தபடி, “வா, போலீசிடம் போகலாம், அங்கு போய் பேசிக்கொள்ளலாம். பாருங்கள் எப்படி ஓடுகிறான் என்று! இவர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள், யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்.

பின்னர் அந்த பயணி தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார், “நான் இப்போது பெங்களூரு விமான நிலையத்தில் இருக்கிறேன். கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு ஏமாற்றுக்காரர்களை நான் சந்தித்துவிட்டேன். முதலில் வந்த நபர், தனது மொபைல் போன் மூலம் தனக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருமாறு உதவி கேட்டார். தனக்கு பணம் எதுவும் தேவையில்லை, டிக்கெட் மட்டும் புக் செய்து கொடுத்தால் போதும் என்றார். ஆனால், அவரது முகபாவனையை வைத்தே அவர் மோசடிக்காரன் என்பதைப் புரிந்துகொண்டு அங்கிருந்து விரட்டினேன்.

சற்று நேரத்திற்குப் பிறகு, மற்றொரு இளைஞன் என்னை அணுகினான். அவனது கையில் ஒரு போர்டிங் பாஸ் இருந்தது, அதில் சில க்யூஆர் கோடுகள்   ஒட்டப்பட்டிருந்தன. தன்னால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றும், தனக்காக அந்த பேமெண்ட்டை முடித்துக் கொடுத்தால் பின்னர் பணத்தை அனுப்பிவிடுவதாகவும் கூறினான். இதுவும் ஒரு மோசடி என்பதை உணர்ந்து நான் அவனை சத்தமிட்டதும் அவனும் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் முதலாவது நபர் அந்த பயணியின் கண்ணில் பட்டபோது, பயணி அவரை வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். “ஏன் என்னை வீடியோ எடுக்கிறாய்?” என்று அந்த நபர் கேட்க, “வா போலீசிடம் போகலாம்” என்று பயணி கூறிய அடுத்த நொடி, போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த ஆசாமி அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்.

இந்த வீடியோவின் தலைப்பில், “பெங்களூரு விமான நிலையத்தில் மோசடி ஆசாமிகள் எச்சரிக்கை! இந்த இருவருமே எனது மொபைல் போனை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அணுகினர். யாரும் உங்களுடைய போனை மற்றவர்களிடம் கொடுக்காதீர்கள், அதேபோல தெரியாத எந்த ஒரு க்யூஆர் கோடையும் ஸ்கேன் செய்யாதீர்கள்” என்று அந்த பயணி பதிவிட்டுள்ளார்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், இது போன்ற க்யூஆர் கோடு மற்றும் போர்டிங் பாஸ் மோசடிகள் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களிலும் பரவலாக நடந்து வருவதாகத் தங்களின் ஆதங்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version