இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய T20 அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு T20 உலகக் கோப்பையைப் பெற்றுத்தந்த போதிலும், சமீபத்திய ஃபார்ம் குறைவு காரணமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த T20 அணியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, ஐபிஎல் தொடர்களில் மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்த ஷ்ரேயஸ் ஐயரிடம் இந்திய T20 அணியின் தலைமைப் பொறுப்பை பிசிசிஐ தேர்வுக்குழு ஒப்படைத்துள்ளது.

ஷ்ரேயஸ் ஐயரின் தலைமையிலான இந்த அணியின் துணை கேப்டனாக இளம் வீரர் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் நோக்கில் இந்த இளம்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, ஆரஞ்சு தொப்பியை வென்று உலகையே வியக்கவைத்த 15 வயதே ஆன இளம் பேட்டிங் அற்புதம் வைபவ் சூர்யவன்ஷி, இந்த இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மிக இளம் வயது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா ( துணை கேப்டன்), ரவி பிஷ்னோ, அபிஷேக் சர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), இஷான் கிசன் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி,  ப்ரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு அறிவித்துள்ள இந்த புதிய இளம்படை, வரும் ஜூன் 26 முதல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்களில் களம் காணவுள்ளது குறிப்பிடத்தகக்து

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version