தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் தற்போதைய தவெக அரசு கைவிட முடிவு செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அரசியல் மற்றும் மின்வாரிய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று மின் நுகர்வைக் கணக்கெடுக்கும் முறைக்கு மாற்றாக, ஆளில்லாமல் தானியங்கி முறையில் கணக்கெடுக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோருக்கு 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.20,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த திட்டம் மொத்தம் 6 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டது.

அதேசமயம் கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இந்த திட்டத்திற்கான விலைப்புள்ளிகளை திறந்து இறுதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றது.

இதனை தொடர்ந்து தமிழக மின்வாரியத்தில் கடந்த சில காலமாகவே பல்வேறு கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் அடுத்தடுத்து ஊழல் புகார்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில், இவ்வளவு பெரிய தொகையிலான திட்டத்தைத் தொடர்ந்தால் மேலும் சர்ச்சைகள் வெடிக்கும் என அரசு கருதுகிறது.

மறுபுறம், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் மின் கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறி நுகர்வோர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஏற்கனவே மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால், இப்போதைக்கு இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதே நல்லது என அரசு தரப்பு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version