டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 17 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதால், பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தாள் கசிவு, மதிப்பெண் திருத்தத்தில் குளறுபடி, பணம் பறி உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சூழலில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கல்வித் துறையில் நிலவும் ஊழல்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த மாதம் டெல்லி ஜன்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 17 நாட்களில் அவர் சுமார் 8.2 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 107/70 mmHg ஆகவும், ரத்த சர்க்கரை அளவு 67 mg/dL ஆகவும் பதிவாகியுள்ளது. தசை இழப்பு மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் சோனம் வாங்சுக்கை நேரடியாகத் தொடர்புகொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தவ் தாக்கரே அவருடன் பேசி உடல்நிலையை விசாரித்தார்.
எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட பல்வேறு துறை பிரமுகர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, “இது நீண்ட காலப் போராட்டம். உங்கள் தலைமை எதிர்காலத்திலும் தேவை. உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர முடிவெடுத்துள்ளார்.
“என்னிடம் நிறுத்தச் சொல்லாதீர்கள். அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லுங்கள்” என்று அவர் பதிலளித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் டெல்லியில் பேரணி நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டம் கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை வலியுறுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
