நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தின் 19-வது நாளை எட்டியுள்ளார்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் வெளியிட்ட வீடியோவில், “என் உடல்நிலை நல்ல நிலையில் இல்லை. ஆனால் மிகவும் மோசமாகவும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 59 வயதான வாங்சுக் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஜூலை 15 நிலவரப்படி அவரது உடல் எடை 57.15 கிலோவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 400 கிராம் குறைந்துள்ளதுடன், உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து மொத்தம் 8.9 கிலோ எடை இழந்துள்ளார்.

அவரது ரத்த அழுத்தம் 105/76 mmHg, ரத்தச் சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்சிஜன் செறிவு 97% என பதிவாகியுள்ளது. அவர் சுயநினைவுடனும் மனதளவில் விழிப்புடனும் இருந்தாலும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது ஆதரவாளர்களிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோர வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் “சலோ சன்சத்” (நாடாளுமன்றம் நோக்கி பேரணி)யில் கலந்து கொள்ளுமாறு வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.

சோனம் வாங்சுக்குடன் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) சார்பில் போராட்டத்தில் உள்ள நேஹா, மனீஷ், ஆமீன் ஆகியோரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜேஎன்யூ மாணவர் சங்க இணைச் செயலாளர் டேனிஷ், ஜேஎன்யூ பராக் விடுதி தலைவர் ஹ்ரிஷிகேஷ் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர் தீபக் ஆகியோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சோனம் வாங்சுக்கின் போராட்டம் நாட்டின் மனசாட்சியை எழுப்பியுள்ளது என்றும், மாணவர்களின் பிரச்சினைக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதால் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் வாங்சுக்கிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை முன்னெடுத்து வரும் Cockroach Janta Party (CJP),  ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி மற்றும் ஒருநாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. “கல்வி அமைச்சரின் ராஜினாமா கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version