தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் (2026–2029) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று காலை தொடங்கியது. தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மொத்தம் 21 நிர்வாகப் பொறுப்புகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் அதிகாரி உமாசங்கர் தலைமையில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சங்கத்தின் மொத்தம் 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திரைப்படத் துறையின் பல்வேறு முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில், இயக்குநர் சேரன் தலைமையிலான “நம்ம கே. பாக்யராஜ் அணி” மற்றும் இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையிலான “திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அணி” நேருக்கு நேர் மோதுகின்றன.
சேரன் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சேரன், பொதுச்செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனி மற்றும் சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மறுபுறம், வி.சி. குகநாதன் அணியில் தலைவர் பதவிக்கு வி.சி. குகநாதன், பொதுச்செயலாளராக மனோஜ்குமார், பொருளாளராக லியாகத் அலிகான், துணைத் தலைவர்களாக ‘யார்‘ கண்ணன் மற்றும் ஏ. வெங்கடேஷ் களமிறங்கியுள்ளனர்.
மோதல்; வாக்குவாதம்
இந்த நிலையில், வாக்களிக்க வருபவர்களை சேரன் அணியினர் தங்கள் பக்கம் அழைத்துச் செல்வதாக புகார் எழுந்த நிலையில், இயக்குனர் ஆர்.கே. செல்வமணி அது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது சேரன் அணியினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரே குடும்பத்திற்குள் யார் பொறுப்பேற்பது என்ற போட்டிதான்; வேறு எந்த விரோதமும் இல்லை. இரண்டு அணிகளிலும் எனக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர். யார் சிறப்பாகச் செயல்படுவார்களோ அவர்களுக்கே என் வாக்கு. மறைந்த கே. பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் இன்று அனைவருக்கும் சொந்தமானவர்; அவரது பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று தெரிவித்தார்.
