இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான புவியரசு (96) நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டை அருகே லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாக 1930-ல் பிறந்த புவியரசுவின் இயற்பெயர் சு. ஜெகநாதன். தமிழ் மொழிப் பற்றால் தனது பெயரை புவியரசு என மாற்றிக் கொண்ட இவர், கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலைப் பட்டமும், பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டமும் பெற்றார். 30 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மார்க்சிய சிந்தனையாளராகவும், தமிழ்மொழி ஆட்சி மொழியாக்கப் போராட்டம் உள்ளிட்ட இயக்கங்களில் ஈடுபட்டவருமாவார்.

சமூகப் பொறுப்புணர்வு மிக்க கவிதைகளுக்கும், உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மொழிபெயர்ப்புகளுக்கும் பெயர் பெற்றவர் புவியரசு. வானம்பாடி இலக்கிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான இவர், 80க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, டாஸ்டோவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் படைப்புகளைத் தமிழில் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் வாசகர்களுக்கு உலக இலக்கியச் செல்வங்களை அறிமுகம் செய்தார். அவரது கவிதைகள் ஆங்கிலம், ரஷ்யம், அங்கேரி, சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 2009-ல் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதும், ‘புரட்சிக்காரன்’ (காஜி நஸ்ருல் இஸ்லாம் படைப்பின் மொழிபெயர்ப்பு) நூலுக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதும் (2007) பெற்றுள்ளார். கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளையும் வென்றவர்.

முதலமைச்சர் விஜய் தனது பதிவில், “கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் துறைக்கு அளித்த அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்பது இலக்கிய உலகினருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version