மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு கலைஞரின் புகழ்மட்டம் சற்றும் குறையவில்லை என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
மேலும், தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்று தனது கவித்துவமான பேச்சால் மேடையை அதிரவைத்தார்.
அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
கலைஞரின் 103ஆம் பிறந்தநாள் விழாவுக்கு சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
கூட்டத்தின் எழுச்சியும் உணர்ச்சியும் கலைஞரின் புகழ்மட்டம் குறைந்துவிடவில்லை என்று கும்மியடித்தன.
“தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை.
இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான்
தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல
தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு மக்களைப் பக்கத்தில் அழைத்துக்கொள்வார் கலைஞர்
அதையே பின்பற்றுங்கள் வெற்றி என்பது பெற்றுக்கொள்ள; தோல்வி என்பது கற்றுக்கொள்ள” என்று பேசினேன். சுப.வீரபாண்டியன் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி மேயர் பிரியா ராஜன் பங்கேற்றுப் பாராட்டினார்கள். இவ்வாறு வைரமுத்து அதில் குறிப்பிட்டுள்ளார்.
