சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒட்டுமொத்த உலகையே தனது அசாத்திய பேட்டிங் திறமையால் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயதே ஆன  வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஜூன் 26 முதல் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய இளம்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சர்வதேச கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மிக இளம் வயது வீரர் என்ற பெருமையையும், புதிய வரலாற்றையும் வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளைப் பறக்கவிட்டு ரன் வேட்டை நடத்தினார். உலகின் தலைசிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை மிகச் சாதாரணப் பந்துவீச்சைப் போல எதிர்கொண்ட அவர், தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி, அதிக ரன்கள் குவித்த வீரருக்கான மதிப்பிற்குரிய ‘ஆரஞ்சு தொப்பி’யை வென்று சாதனை படைத்தார். மிக இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற உலக சாதனையைத் படைத்த போதே, இவர் விரைவில் இந்திய அணியின் கதவைத் தட்டுவார் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கணித்திருந்தது.

அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, சூர்யகுமார் யாதவ் போன்ற சீனியர் வீரர்களை விடுவித்து விட்டு, எதிர்கால இந்திய டி20 அணியைக் கட்டமைக்கும் நோக்கில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்த புதிய இளம்படையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. தனது அதிரடியான பேட்டிங் பாணி மற்றும் முதிர்ச்சியான ஆட்டத்திறன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்குப் பெரிய பலமாக மாறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், ஜூன் 26-ல் தொடங்கவுள்ள வெளிநாட்டுத் தொடர்களில் களம் காண இந்த 15 வயது இளம் புயல் தயாராகி வருறார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version