பல்கலைக்கழக தடையின்மை சான்றிதழ் இல்லாமல் நிகர்நிலை பல்கலைக்கழகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்துவது தவறான போக்கு எனக் கூறியுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்கு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற தடையின்மை சான்றிதழ் வழங்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருந்தது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றும் பட்சத்தில் தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் மருத்துவ பல்கலைக்கழகம் எந்தவித முடிவும் எட்டாமல் இருந்து வந்தது.

அதேசமயம் சம்பந்தப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலோடு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டன.

இதில் ஆறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இப்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாறுவதால் தமிழகத்திற்கான எம்பிபிஎஸ் சீட்டுகள் குறையும் நிலை ஏற்படும்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் , நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் பாதிக்கும் சூழல் உருவானது.

அதன் அடிப்படையில் ஆறு தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டுள்ளதால்,  சராசரியாக 1300 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் பறிபோயுள்ளன. அதுமட்டுமின்றி மருத்துவ படிப்புக்கான கட்டணமும் 13.5 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை மாணவர்களுக்கு உயர்ந்துள்ளது.

எனவே பல்கலைக்கழக தடையின்மை சான்றிதழ் இல்லாமல் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலை பெற்று  தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாறுவதற்கு எதிராக  சட்டரீதியிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version