தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25-ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதற்கிடையில், கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவில் நீடிக்கும். ஆனால் உள் மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் தேவாலா, நடுவட்டம், பந்தலூர், பார்வூட், வூட் பிரையர் எஸ்டேட், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் விழுப்புரம் மாவட்டம் வளத்தி உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
