அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 10-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில், வழக்கத்திற்கு மாறாக முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக ‘தேசிய கீதமும்’ பாடப்பட்டு, அதன்பின்னரே மூன்றாவதாக ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபு மாற்றப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த மரபு மீறலுக்கு எதிராக, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், கடந்த 1891-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடலைக்கொண்டே தமிழக அரசு விழாக்கள் தொடங்குவதும், ‘தேசிய கீதத்துடன்’ நிறைவடைவதும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.

தற்போதைய புதிய நடைமுறை இந்த மரபைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து என்பது வெறும் சடங்கல்ல; அது தமிழர்களின் பண்பாடு, உணர்வு மற்றும் அடையாளத்தின் குறியீடு.

அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என கடந்த ஜனவரி 28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. எனினும், மாநிலப் பாடல்களைப் பாட அது தடை விதிக்கவில்லை.

இத்தகைய கலாச்சார முரண்பாடுகளைத் தவிர்க்க, வருங்கால அரசு விழாக்களில் ‘தமிழ்த் தாய் வாழ்த்துக்கே’ முதலிடம் வழங்க உரிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு வந்தே மாதரத்திற்கோ அல்லது தேசிய கீதத்திற்கோ எதிரானது அல்ல என்றும் மனுதாரர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. அப்படியிருக்கும் போது, அந்த சுற்றறிக்கையை நேரடியாக எதிர்க்காமல் நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, தற்போதைய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசின் சுற்றறிக்கையை முறைப்படி எதிர்த்துப் புதிய வழக்குத் தொடர அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பழைய மனுவைத் திரும்பப் பெறவும், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்துப் புதிய வழக்குத் தொடரவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version