டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு வழக்கில் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
முன் ஜாமீன் தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டும் இல்லை; பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதாகவும்,
டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தில், ரூ.100 கோடி வரை முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளதால், காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதாகக் கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
