இந்திய ரயில்வே பயணிகளின் நீண்டகால குறைபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவில் புதிய டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய அமைப்பு, முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு மற்றும் நீண்ட வரிசைகள் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. பல நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் டோக்கன் முறையின் கீழ், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு வரும் பயணிகளுக்கு முதலில் ஒரு டோக்கன் வழங்கப்படும்.

இந்த டோக்கனில் உள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் அவர்களின் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒழுங்கான முறையில் டிக்கெட் பதிவு செய்யப்படும். இதனால் கவுண்டர் அருகே ஏற்படும் அவசரமும், தள்ளுமுள்ளும் கணிசமாகக் குறையும் என ரெயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்பதிவு மையத்திற்கு வரும் பயணிகள் சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆதார் அட்டை அல்லது வேறு செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை) கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் பெயர், வயது, பாலினம், இருக்கை விருப்பம் உள்ளிட்ட முழு விவரங்களையும் முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது நல்லது. இது முன்பதிவு செயல்முறையை வேகப்படுத்தி, பிற பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும். இந்தப் புதிய டோக்கன் முறை வெற்றிகரமாக அமைந்தால், படிப்படியாக நாடு முழுவதும் உள்ள பிற ரெயில்வே மண்டலங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவில் நேர்மை, ஒழுங்கு மற்றும் வசதியை உறுதி செய்யும் இந்த நடவடிக்கை பயணிகளிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதே எங்கள் நோக்கம். இந்த முறை சீராகச் செயல்படுத்தப்பட்டால், முன்பதிவு மையங்கள் இனி அமைதியான மற்றும் ஒழுங்கான இடங்களாக மாறும்” என்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version