பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, தவணை முறையில் மக்களின் வருமானத்தை மோடி அரசு கொள்ளையடிப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசு தினசரி ரூ.1000 கோடி வரி வசூலித்த போதிலும் பாஜகவின் பேராசை இன்னும் அடங்கவில்லை என அவர் சாடியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது, அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் அரசு தொடர்ந்து மக்களைச் சுரண்டி வந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், “நெருக்கடியான காலகட்டங்களில் தேர்தலை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் மத்திய அரசு, தேர்தல் முடிந்தவுடன் மக்களிடம் ‘தியாகம்’ செய்யுமாறு கூறுகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் எரிபொருள் விலை மிகவும் குறைவு என்று மத்திய அரசு பொய்களை கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டபோது, இந்தியாவில் “எல்லாம் நலமாக இருக்கிறது” என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மயக்க மருந்து ஊட்டிக் கொண்டிருந்த வேளையில், உலகின் பிற நாடுகள் தங்களின் குடிமக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கின என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலி எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்து, தங்கள் மக்களுக்குச் சிறிதளவு நிவாரணம் அளித்தது. ஆஸ்திரேலியா கலால் வரியைக் குறைத்து, குடிமக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை சுமார் ரூ.17 வரை குறைத்தது. ஜெர்மனி எண்ணெய் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.17 முதல் ரூ.19 வரை குறைத்தது.
இதேபோல், இங்கிலாந்து குடும்பங்களுக்கு ரூ.100 எண்ணெய் மானிய உதவியை வழங்கியதுடன், எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான வரிகளையும் குறைத்தது. அயர்லாந்தின் €250 மில்லியன் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு, பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு சுமார் €0.15 வரையும், டீசல் விலையை €0.20 வரையும் குறைத்ததாக சுட்டிக்காட்டிய கார்கே, பிரதமர் மோடி அவர்களே, இந்தத் தவணை முறை கொள்ளையில் யாருக்கெல்லாம் பங்கு போகிறது என்று சொல்லுங்கள்?” மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் அரசு ஏன் இவ்வளவு சமரசம் செய்து கொள்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தற்போதைய மத்திய அரசின் உண்மையான நெருக்கடி என்பது அதன் ‘தலைமைத்துவத்தில்’ தான் உள்ளது என்பதை 140 கோடி இந்தியர்களும் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
