அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 16-ம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர். அவரது இந்த ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதோடு, விராலிமலை தொகுதி காலியானதாகவும் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் த.வெ.க-வில் இணைந்தார்.
இந்த நிலையில், அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “விஜயபாஸ்கர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் ஏற்கனவே சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு நிலுவையில் உள்ள சூழலில், தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா செய்துள்ளார். அத்தகைய சூழலில், அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டப்படி தவறானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “விஜயபாஸ்கரின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் எந்தவித சட்டப்பூர்வமான பரிசீலனையும் செய்யாமல், இயந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளார். இது அரசியல் சாசன விதிகளுக்கும், இயற்கை நீதிக்கும் முரணானது” என்று அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், சபாநாயகரின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அதிமுக கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
