தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, பணவீக்க நாயகன் (Inflation Man) மோடி மீண்டும் தனது வேலையைக் காட்டிவிட்டார். மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து சத்தமில்லாமல் பணத்தைப் பறிப்பதற்காகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தவணை முறையில் உயர்த்தி வருகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் ஒரு கடுமையான பொருளாதாரப் புயல் வீசப்போகிறது என்று நான் பல மாதங்களாகவே எச்சரித்து வருகிறேன். ஆனால் பிரதமர் மோடியோ, எப்போதுமே செய்வது போல அப்போதும் தேர்தல் பிரச்சாரங்களில் மட்டுமே பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் முடிவடைந்த அடுத்த கணமே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை 8 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது.
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிப்பதும், மற்ற நேரங்களில் பொதுமக்களின் பாக்கெட்டுகளில் கை வைப்பதும்தான் இந்த ‘பணவீக்க நாயகன்’ மோடியின் ஒரே வேலையாக உள்ளது” என்று ராகுல் காந்தி மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
