நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நாளை மீண்டும் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சிங் மைதானத்தில் நாளை (ஜூன் 6) தொடங்கும் இந்த ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய பிறகு, கடந்த 6 மாதங்களாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 2026-ஆம் ஆண்டில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். எனினும், இப்போட்டி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உட்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இன்னிங்ஸை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கவுள்ளனர். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் 539 ரன்கள் குவித்த ராகுல், சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 593 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ளார். மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஜெய்ஸ்வால் 427 ரன்கள் எடுத்துள்ளார்.
மூன்றாவது வரிசையில் களம் இறங்க சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 232 ரன்கள் உட்பட மொத்தம் 532 ரன்கள் குவித்த படிக்கல்லுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. கேப்டன் சுப்மன் கில் 4-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5-வது இடத்திலும் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடர் ரிஷப் பண்ட்டிற்கு (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) சுமாரான சீசனாக அமைந்தது. இதனால் அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு கே.எல்.ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட்டின் சாதனை அசாத்தியமானது என்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்களாக செயல்படுவர். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஹர்ஷ் துபே அல்லது ராஜஸ்தானின் மானவ் சுதர் ஆகிய இருவரில் ஒருவருக்கு நாளை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார். இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா அல்லது பஞ்சாப்பின் குர்னூர் ப்ரார் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதேபோல், ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி களம் காண்கிறது. ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா ஒமர்சாய் போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணிக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.
இந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அதாவது, ஜூன் 14ம் தேதி 1-வது ஒருநாள் போட்டி (தர்மசாலா), ஜூன் 17ல் 2-வது ஒருநாள் போட்டி (லக்னோ), ஜூன் 20ல் 3-வது ஒருநாள் போட்டி (சென்னை). அனைத்து போட்டிகளும் மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
