ரன்வீர் சிங், சாரா அர்ஜூன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் துரந்தர். இப்படத்தின் முதல் மற்றும் 2ம் பாகம் மிகப்பெரிய ஹிட்டானது. துரந்தரின் முதல் பாகம் ஓடிடி தளத்திலும் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்த சூழலில் துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும், சிபிஎப்சி எனப்படும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் தேசப்பற்று, பழிவாங்குதல், பாகிஸ்தானின் நிழல் உலக பயங்கரவாத செயல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,

டெல்லியில் உள்ள எஸ்.எஸ்.பி எனப்படும் சஷஸ்திர சீமா பல்- ஆயுதமேந்திய எல்லைக் காவல் படையின் தலைமை காவலரான தீபக் குமார், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், துரந்தர் 2 படத்தில் நம் ஆயுதப் படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இது நாட்டின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”துரந்தர் 2 திரைப்படம் கற்பனைக் கதையாக இருக்கலாம் என்றாலும், மனுதாரர் எழுப்பியுள்ள கவலைகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை என புறந்தள்ள முடியாது. பொழுதுபோக்கு நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் மறுக்க இயலாது.

மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு என சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் விசாரிக்க வேண்டும். துரந்தர் திரைப்படத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version