முதலமைச்சர் விஜய்யின் ஒப்புதலுடனேயே சமஸ்கிருத மயமான ‘வந்தே மாதர’த்திற்கு முதலிடம் தந்து, மீண்டும் தமிழுக்கு மூன்றாமிடம் தரப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,” இன்று (21.5.2026) காலை ஜோசப் விஜய் அவர்களது ஆட்சி, தனது அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை அறிவித்து, 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சிக்குத் தந்த இரண்டு அமைச்சர்கள் உள்பட) பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சியின் தொடக்கத்தில், முதலிடம்  ‘வந்தே மாதரம்’ பாட்டுக்கு! (சமஸ்கிருத மயமாக்கப்பட்ட வங்காளம்) இரண்டாவது, ‘ஜன கண மன அதி நாயக’ ‘நாட்டுப் பண்’ என்பதைப் பாடி, ‘நீராரும் கடலுடுத்த’ என்ற மொழி வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

முந்தைய ‘திராவிட மாடல்’ அரசு, தொடர்ந்து கடைப்பிடித்த செம்மொழியாம் எம் மொழி தமிழுக்கு முதலிடம் தந்து, தேசியப் பண் (‘ஜன கண மன’ பாட்டு) சட்டமன்றத்தில் இறுதியில்தான் இசைக்கப்படும் வகையில் நிகழ்வை நடத்தியபோது, அதற்கு அடாவடித்தனம் செய்த, முன்னிருந்த ஆர்.என்.ரவி என்ற ஆளுநரின் போக்கை அனுமதிக்காமல், இந்த உரிமையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டினார்.

சென்றமுறை பதவியேற்பு விழாவின்போது நடைபெற்ற அதே முறை போன்றே, இம்முறையும் இன்றைய  பதவியேற்பு விழாவையும் நடத்திக் காட்டி, தமிழுக்கு நிரந்தரமாக மூன்றாம் இடம் என்றாக்கியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் – அதனை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு புதிய அரசு.

புதிய ஆட்சியின் ‘‘நம்பகத்தன்மை’’ இப்போது இவ்வளவு குறுகிய இடைவெளியில் சந்தேகத்திற்குரிய கேள்விக்குறியாகலாமா? முன்பு, ஆளுநர் மாளிகையின் ‘லோக் பவன்’ ஏற்பாடு செய்தது என்று ஒருவகை சமாதானம் கூறப்பட்டது.

இப்போது புதிய முதலமைச்சராகியுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் ஆணைப்படி நடக்கவேண்டிய பொதுத் துறை (Public Department) நிகழ்ச்சிதானே! இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நிரல் முறைப்படி, புதிய முதலமைச்சர் ஒப்புதலுடன்தானே நடந்திருக்கவேண்டும்? அலட்சியப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version