தூத்துக்குடியில் மது விற்பனை தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவமும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜனின் மகன் அருணாச்சலம் (26). இவர் மூன்றாவது மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி இரவு பார் மூடப்பட்ட பிறகு, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றதாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் அருணாச்சலத்தைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 120 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலையே அருணாச்சலத்தின் உடல் மற்றும் தலை, கால்களில் பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றபோது கடுமையாகத் தாக்கியதால்தான் தனது மகனின் தலையிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்று அவரது தாயும், உறவினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். அருணாச்சலத்தைக் கொடூரமாகத் தாக்கிய அந்த நான்கு காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உயிரிழந்த வாலிபரின் உறவினர்களிடம் தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி சுனில் மற்றும் காவல்துறையினர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சமீபத்தில் கன்னியாகுமரியில் நிகழ்ந்த சபரிவர்மன் லாக்கப் மரண சர்ச்சை அடங்குவதற்கு தமிழ்நாட்டில் மற்றொரு லாக்கப் மரணம் நிகழ்த்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version