தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பிற்கும் இடையே நிலவி வந்த உட்கட்சி மோதல் தற்போது சுமுக முடிவுக்கு வந்துள்ளது. இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்தனர். ஆனால் சி.வி.சண்முகம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, கொறடா விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகரிடம் அளித்திருந்த கடிதங்களை முறைப்படி திரும்பப் பெற்றுக்கொண்டதாக அறிவித்தார். அதாவது, நாங்கள் அனைவரும் பேரவைத் தலைவரை நேரில் சந்தித்தோம். முன்னதாக, எங்களுக்குள் ஏற்பட்ட சூழலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தோம். அப்போது எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 25 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி அவர்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்திருந்தார்.
அதேபோல் எங்கள் தரப்பிலும் மனு கொடுக்கப்பட்டது. தற்போது இரு தரப்பும் சுமுகமாகப் பேசியதை அடுத்து, அந்த இரண்டு தகுதிநீக்க மனுக்களையும் சபாநாயகரிடம் இருந்து திரும்பப் பெற்றுவிட்டோம். நாங்கள் அனைவரும் ஒரே அணியாகவே இருக்கிறோம் என்பதை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.
கட்சியின் தலைமை மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிய அவர், எங்களுக்குள் இருந்தது வெறும் கருத்து வேறுபாடுதானே தவிர, கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. எங்களின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மட்டும்தான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமான ஒன்றுதான்.
கட்சியை வலுப்படுத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.
தொடர்ந்து, “சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் சி.வி.சண்முகத்தின் கையொப்பம் இருக்கிறதா? அவருடைய தற்போதைய நிலைப்பாடு என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி நேரடியாகப் பதில் அளிக்காமல், “நாங்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டோம். இனி ஒருங்கிணைந்த அதிமுகவாக மட்டுமே செயல்படுவோம். எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை, வெறும் கருத்து வேறுபாடு மட்டும்தான்” என்று கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
