ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிவேகமாக பரவி வரும் மாற்று வகை எபோலா வைரஸைக் கட்டுப்படுத்த, ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) எனப்படும் புதிய மரபணு மாற்றமடைந்த எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி காங்கோவில் இதுவரை 204 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று அண்டை நாடான தெற்கு சூடான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது முற்றிலும் புதிய வகை உருமாறிய வைரஸ் என்பதால், இதற்கென பிரத்யேகமான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருத்துவ சிகிச்சைகளோ இதுவரை உலகளவில் இல்லாமல் இருந்தது.

காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா பாதிப்பு கட்டுப்பாடின்றி அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த மாத 17-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த புண்டிபுக்யோ எபோலா வைரஸை முறியடிப்பதற்கான புதிய தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தடுப்பூசி ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் சுகாதார நெருக்கடியைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version