சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் குழுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் விசாரணை மற்றும் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இதயத்துல்லா நியமிக்கப் பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக சொர்ணா சேதுராமன், சி.வி. மெய்யப்பன் மற்றும் கமலிகா காமராஜர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

**இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;-

எங்கள் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் குறித்தும், அடுத்த கட்டமாக கட்சி ரீதியாக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொண்டர்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

தொண்டர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தலைமையிடம் முறையிடுவோம். மேலும், கட்சி தலைமை எங்களுக்கு 60 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் தொண்டர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் மற்றும் கருத்துகளை தலைமையிடம் எடுத்துரைப்போம்.

எங்களின் பயணத்தின் போது தொண்டர்கள் நேரில் சந்தித்து கட்சியில் உள்ள நிறை, குறைகள் குறித்து தெரிவிக்கலாம். அனைத்து கட்சிகளிலும் உள்கட்சி பிரச்சினைகள் இருப்பது இயல்பான ஒன்றுதான். 50 ஆண்டுகள் பழமையான கட்சியிலிருந்தும், 3 ஆண்டுகள் தொடங்கிய கட்சியிலிருந்தும் இத்தகைய பிரச்சினைகள் இருந்து கொண்டே தான் வருகின்றன” என்றார்.

அப்போது, “மூன்று ஆண்டுகள் தொடங்கிய கட்சி என்று தமிழக வெற்றிக் கழகத்தைக் குறிப்பிட்டு கூறுகிறீர்களா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாக ஒரு கருத்தை மட்டுமே தெரிவித்தேன்.

எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாக உள்ளது. மற்ற கட்சிகள் குறித்து பேசும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version