சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திருப்பதோடு, சில குடும்பத்துக்குள் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டு முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், 9192 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவினார்.
முதலமைச்சரே தோல்வி அடைந்த நிலையில், அவரது மகனும் துணை முதலமைச்சருமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 66,992 வாக்குகள் பெற்று 7140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா 69,351 வாக்குகள் பெற்று வெற்றிஅடைந்துள்ளார். ஆனால், விருதுநகரில் போட்டியிட்ட இவரது மகன் விஜயபிரபாகரன் 54,262 வாக்குகள் மட்டுமே பெற்று தவெக வேட்பாளர் செல்வத்திடம் 9391 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இப்படி தந்தைக்கு தோல்வி மகனுக்கு வெற்றி, தாய்க்கு வெற்றி மகனுக்கு தோல்வி பரிசளித்த வாக்காளப் பெருமக்கள், தந்தைக்கும் மகனுக்கும், தாய் மகனுக்கும் வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.

அண்மையில் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்ட லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் வெற்றி பெற்ற நிலையில், , புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியைத் தொடங்கியல் லீமா ரோஸின் மகன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீனும் 16592 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தந்தை ஐ.பெரியசாமியும், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ஐ.பி.செந்தில்குமாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வாக்காளர்களின் மனதை புரிந்து கொள்வது என்பது சிரம்தான் போல!
