பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு சிந்து நதி நீர் கிடையாது” என்றும், அமைதியின் மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்க வேண்டும் என்பது இந்தியாவுக்குத் தெரியும்” என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநில பாஜக சார்பில் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அறிஞர்கள் கூட்டத்தில்’ கலந்துகொண்டு பேசிய அவர், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. பாஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்துார் மூலம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்படிப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளது” என்றார்.
மேலும், “எங்கள் நாட்டு மக்களின் கண்ணீரை வரவழைப்பவர்கள், எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது. பயங்கரவாதத்தின் பாதுகாவலர்களுக்கும், மனிதகுலத்தின் எதிரிகளுக்கும் சிந்து நதியின் ஒரு துளி நீர் கூடச் சென்றடைவதை என்டிஏ அரசு அனுமதிக்காது” என அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் கடந்த 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று கையெழுத்தானது. உலகிலேயே மிகச் சிறந்த நீர் பகிர்வு ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு பாஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச சட்டத்தின் கீழ் தனக்குள்ள இறையாண்மை உரிமைகளைப் பயன்படுத்திய இந்தியா, இந்த ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நம்பகத்தன்மையுடனும், நிரந்தரமாகவும் கைவிடும் வரை இந்த ஒப்பந்தம் முடக்கப்பட்டே இருக்கும் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், கடந்த 12 ஆண்டுகால பாஜாக தலைமையிலான மத்திய அரசின் முக்கிய சாதனைகளைப் பட்டியலிட்டார். “காங்கிரஸ் அரசால் ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-ஐ ஒருபோதும் நீக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், எங்கள் அரசு அதனை மிக எளிதாக நீக்கிக் காட்டியது. ஒரு காலத்தில் பயங்கரவாதத்தோடு ஒப்பிடப்பட்ட காஷ்மீர், இன்று சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நம் தேசியக்கொடி கம்பீரமாகப் பறக்கிறது. தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன” என்றார்.
நாடு முழுவதும் நக்ஸல் அச்சுறுத்தல் இல்லாத நிலையை உருவாக்கியது, ஜிஎஸ்டி வரி முறை அமலாக்கம், நாடு தழுவிய மின்மயமாக்கல் மற்றும் நீதித்துறையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகில் இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக உருவெடுத்துள்ளது என்றும், பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு அது எப்போதும் உதவி வந்துள்ளது என்றும் அவர் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்றின் போது பல நாடுகளுக்கு இந்தியா வழங்கிய உதவியைக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தியா உலகம் முழுவதும் ஒரு “உலக சகோதரனாக” பார்க்கப்படுகிறது என்றார். மேலும், இந்தியாவிடம் தடுப்பூசிகள் மட்டுமல்ல, பிரம்மோஸ் ஏவுகணையும் உள்ளது என்பதை இந்தியாவின் எதிரிகள் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
