தமிழ்நாடு அரசு, சிறு கனிமங்களின் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் முக்கியத் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் அமைந்த 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை வளங்கள் துறை ஜூலை 23ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் இவை அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, கட்டிடம் மற்றும் சாலை அமைப்பிற்கான கற்களின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு ‘கிரானைட் அல்லாத கற்கள்’ என குறிப்பிடப்பட்ட வகைக்குப் பதிலாக, இயற்கையாக சிதைந்த கருங்கல் (weathered rough stone), கல் துண்டுகள் (khandas), பெரிய பாறைக்கற்கள் (boulders), உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட கற்கள், மெட்டல் ஜல்லி, பாலாஸ்ட், மில்ஸ்டோன், கை சக்கைகள் உள்ளிட்டவை தெளிவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது கட்டுமானப் பொருட்களின் வரையறையை தெளிவுபடுத்தி, சுரங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும்.
சுரங்க குத்தகைதாரர் அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிடைக்கும் இயற்கையாக சிதைந்த கருங்கல்லை விற்பனை செய்ய விரும்பினால், முதலில் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரக ஆய்வகத்தில் மாதிரி பரிசோதனை செய்து, அதில் உள்ள கனிமங்களின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை இத்தகைய சிதைந்த பாறைகளை சரிபார்ப்பு இல்லாமல் விற்பனை செய்யலாம் என்ற நிலை மாறியுள்ளது.
ஆய்வில் அதிக மதிப்புள்ள கனிமங்கள் கண்டறியப்பட்டால், அவை 1957ஆம் ஆண்டு மத்திய சட்டம் மற்றும் மாநில விதிகளின்படி விற்பனை செய்யப்பட வேண்டும். அதிக சைனியரேஜ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பிற கனிமங்கள் இருந்தால், அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்திய பிறகு, அதே கல்லை இயற்கையாக சிதைந்த கருங்கல்லாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.
இல்லையெனில், சாதாரண சிதைந்த கருங்கல்லாகவே அனுமதிக்கப்படும். இந்த நடவடிக்கை, கனிம வளங்களின் சரியான பயன்பாட்டை உறுதிசெய்து, அரசுக்கு உரிய வருவாயைப் பெற்றுத்தரவும், முறைகேடுகளைத் தடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத் துறையினர் புதிய விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
