தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மறுவரையறை செய்யும் முயற்சி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தற்போது 39 ஆக உள்ள தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தற்போதைய 543 மக்களவை தொகுதிகள் 850 அல்லது அதற்கு அருகில் உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தின் ஆளும் கட்சி மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டில் முன்னோடியாக இருந்த மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. இந்நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், தமிழகத்திற்கு 20 கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். உத்தேச பட்டியலில் திருத்தணி, திருவள்ளூர், சென்னை வடக்கு, கிழக்கு, மத்திய, தெற்கு, மேற்கு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி/ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மேட்டூர், ராசிபுரம், நாமக்கல், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம்/பழனி, பொள்ளாச்சி, கோவை கிழக்கு, மேற்கு, நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர்/லால்குடி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி/கன்னியாகுமரி, கன்னியாகுமரி/நாகர்கோவில், தென்காசி, சிவகாசி, விருதுநகர், தேனி, மதுரை கிழக்கு, மேற்கு, திண்டுக்கல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியல் இன்னும் உத்தேசமானதே. மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகே உறுதியாகும். தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
