கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், விருத்தாசலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். மேலும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்த அவர், அரிசி உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேமுதிக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அறிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் எல்-நினோ தாக்கத்தால் வறட்சி அபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இறுதியாக தற்போதைய ஆட்சியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, “இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சியின் செயல்பாட்டை மதிப்பிடுவது மக்களின் கையில்தான் உள்ளது” என்று கூறினார்.
