ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே அமமுக கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாதவது;-
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது ஏற்கக்கூடியது அல்ல. அவர் பேசியதற்கு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தை அணுகி இருக்கலாம். ஆனால் அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக கைது நடவடிக்கை எடுத்துள்ளது.
அமமுக சட்டமன்ற உறுப்பினரில் முதலில் தொடங்கப்பட்ட குதிரை பேரம் அரசியல், தற்போது வரை தொடர்கிறது. தூய சக்தி என தெரிவித்து தற்போது தமிழகத்தில் எம்எல்ஏக்களை வாங்குகின்ற சக்தியாக தமிழகத்தில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கி தவெக செயல்படுகிறது. இதற்கு தமிழக மக்கள் விரைவில் உரிய பதில் அளிப்பார்கள்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை கலாச்சாரம் போன்றவற்றில் எந்த ஒரு சமரசமும் இன்றி சட்ட ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
பொய் சொல்வதற்கே ஆதவ் அர்ஜுனா அமைச்சராக செயல்படுகிறார். கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறை காரணம் என தெரிவிக்கும் நிலையில் தற்போது காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் உறங்கிக் கொண்டு உள்ளாரா அல்லது அவரது காதில் கேட்கவில்லையா காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையின் மீது அபாண்டமாக பழி சுமத்தும் பொழுது அரசின் மீது அதிருப்தி அடைய மாட்டார்களா?
தமிழக முதல்வர் மற்றும் தவெக நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விட முடியுமா? அனைவரையும் பாதுகாக்கும் கடமை காவல்துறையினரிடம் மட்டும் உள்ளது. எனவே பொறுப்பான துறையில் இருக்கும் அமைச்சராக இருப்பவர் பொறுப்பற்ற முறையிலும், மேலூம் கரூர் சம்பவம் குறித்து நடைபெறும் சிபிஐ வழக்கு விசாரணையில் குற்றவாளியாக இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுனா ஆணவத்துடன் பேசுவது கண்டிக்கத்தக்கது.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் 60% வந்துவிட்டனர். மேலும் 30% வந்து விடுவார்கள் என பர்சன்டேஜ் பேசுகிறார். என்ன பர்சன்டேஜ் என தெரியவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் என்பதால் அப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை. அம்மாவின் உண்மை தொண்டர்கள் பாதுகாக்கின்ற இயக்கம். அதனை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்து விட முடியாது. யாரோ ஒரு சிலர் சுயநலத்திற்காக பதவி ஆசையில் ஆளுங்கட்சி ஆக முடியவில்லை என்ற விரக்தியில் ஆளுங்கட்சியை நோக்கி செல்கிறார்கள். இதனால் எந்த ஒரு இயக்கமும் அழிந்து விடாது. தொண்டர்கள் இயக்கத்தை பாதுகாப்பார்கள்.
முதலமைச்சருக்கு ஆட்சி நிலைக்குமா என்ற பயம் உள்ளது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற விசிக, கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் கட்சியினர் மீது நம்பிக்கை இல்லை. அதன் காரணமாக தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ஜனநாயக விரோத செயலாக குதிரை பேரம் நடத்தி வருகிறார். எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி தன் கட்சிக்கு அழைத்துக் கொள்வதன் காரணமாக விட்டில் பூச்சியைப் போல் அனைவரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதுபோன்ற செயலை விட்டு விட்டு அரசு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முழு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
ஏதோ விபரீத அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்து உள்ளீர்கள். மக்கள் நலன் கருதி பெரும்பான்மையை தவெக அரசுக்கு கொடுக்கவில்லை. கடிவாளத்தை திமுக மற்றும் அண்ணா திமுக கூட்டணி கட்சிகளிடம் தான் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அதனால் அரசு ஒழுங்காக செயல்பட வேண்டும் என்பது அனைவரது விருப்பம்.
