தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். உணவு பொருள் வளங்கள் துறை, வருவாய்த் துறை, மருத்துவத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 7,873 பயனாளிகளுக்கு மொத்தம் 57 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி தேனி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தேனி மாவட்டத்தின் நிலை குறித்து விரிவாகப் பேசினார். “கடந்த 70 ஆண்டுகளாக தேனி ஒடுக்கப்பட்ட மாவட்டமாகவே இருந்து வந்துள்ளது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோதும் இங்கு பெரிய அளவிலான திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை” என்று குறிப்பிட்டார். முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் பிடித்து வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதாக வரும் புகார்கள் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர், “அத்தகைய செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார். “நீட் வேண்டாம் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்தோம். தேர்வை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடும் இதுவே. தமிழகத்தில் போராடும் மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.

மின் கட்டணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், “200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற திட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளது. எந்த இடத்திலும் மின் கட்டணம் உயரவில்லை. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை ஆய்வு செய்தோம். அவை தவறானவை என தெரியவந்தது. சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். உண்மையான உயர்வு தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விளக்கினார்.

தேனி மாவட்டத்தின் முக்கியப் பிரச்சினையான மலையருவசநாடு மற்றும் சுற்றியுள்ள மலைக்கிராம மக்களை புலிகள் காப்பக ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், “பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. அவர்களுக்கு உரிய வாழ்வாதாரம் உருவாக்க என்ன செய்யலாம் என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவு இருந்தாலும், மக்களின் நலனுக்குத் தேவையான உதவிகளை அரசு கண்டிப்பாகச் செய்யும்” என்று உறுதியளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version